இன்றைய தியானம்(Tamil) 20-01-2021
இன்றைய தியானம்(Tamil) 20-01-2021
மையப்பகுதியில் ஏதேனும் உண்டா?
“...தன்னோடே பேசின கர்த்தருக்கு நீர் என்னைக் காண்கிற தேவன் என்று பேரிட்டாள்....” – ஆதியாகமம் 16:13
ஒரு பக்திமிக்க கிறிஸ்தவ குடும்பம் அது. அந்த வீட்டின் நடு அறையில் “நீர் என்னைக் காண்கிற தேவன்” என்ற வசனம் தொங்கவிடப்பட்டிருக்கும். குடும்பத்திலுள்ள அனைவரும் குடும்ப ஜெபத்திற்கு முன் இந்த வசனத்தை சத்தமாக வாசித்தபின் தான் ஜெபம் தொடங்கும். இது அப்பாவின் உத்தரவு. சிறுவயது முதல் பிள்ளைகள் இப்படி தேவபயத்துடனும், கண்டிப்புடனும் வளர்க்கப்பட்டனர். தேவன் பிள்ளைகளின் வாழ்வை ஆசீர்வதித்தார். மூத்த மகனுக்கு அரசாங்க வேலை கிடைத்தது. ஒருமுறை பணநெருக்கடியின் காரணமாக ஒரு பெரிய தொகையை லஞ்சமாகப் பெற்றுக் கொண்டான். யாருக்குமே தெரியாமல் காரியத்தை கச்சிதமாக முடித்துவிட்ட திருப்தியில், எந்தவித பயமும் அவனுக்கு இல்லை. அன்று வழக்கம் போலவே “நீர் என்னைக் காண்கிற தேவன்” என்று வாசித்த உடன் அன்றைய நிகழ்வு நினைவிற்கு வரவே, கண்ணீரோடு தேவசமுகத்தில் தன் துணிகர பாவத்தை அறிக்கையிட்டான். மறுநாள் காலையில் மேலதிகாரியிடம் பணத்தை ஒப்படைத்தான்.
வேதத்திலும், ஒரு மனிதன் தேவன் தன்னை பார்த்துக் கொண்டிருக்கிறார் என்ற உணர்வின்றி நடந்ததினிமித்தம் ஏற்பட்ட விளைவை ஆவியானவர் எழுதி கொடுத்துள்ளார். அவர் தான் ஆகான். எரிகோவிலுள்ள எந்த பொருளையும் எடுக்க வேண்டாம் என தேவன் இஸ்ரவேலரை எச்சரித்தும், ஆகான் அங்குள்ள பொருட்களின் மேல் ஆசைப்பட்டு அவற்றை எடுத்து தன் கூடாரத்தின் மத்தியிலே பூமிக்குள் புதைத்து வைத்து விட்டான். இது யார் கண்களிலும் படவில்லை என்று கூலாகவே இருந்தான். ஆனால் இவரது துணிகர பாவம் முழு இஸ்ரவேலரையும் பாதித்தது. ஆம், நடந்த யுத்தத்தில் இஸ்ரவேலர் தோல்வியடைந்தனர். இதற்கு ஆகானின் பாவமே காரணம் என தேவன் கூறியபோது அவர் கல்லெறிந்து கொல்லப்பட்டார். ஆம், தேவனுக்கு மறைவானது ஒன்றுமேயில்லை.
இதை வாசித்துக்கொண்டிருக்கும் உங்கள் வாழ்விலும் வெற்றியில்லையோ? அப்படியென்றால், உங்கள் கூடாரத்தின் மையப்பகுதியில் தேவனுக்குப் பிரியமற்றது ஏதேனும் உண்டா என்று ஆராய வேண்டும். கூடாரம் என்பது நம் சரீரம், மையப்பகுதியோ நம் இருதயம்! இருதயத்திற்குள் இரகசிய பாவங்கள் ஏதேனும் உண்டோ? யாருக்கும் நான் செய்யும் காரியம் தெரியாது. இது வெளிக்கு வர வாய்ப்பேயில்லை என்று தைரியமாய் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்களோ? தேவன் உங்கள் அந்தரங்கத்தை பார்த்துக்கொண்டிருக்கிறார் என்ற உணர்வு இல்லாமல் இருக்கிறீர்களா? உங்கள் குடும்பத்திலும், பிள்ளைகள் பேரப்பிள்ளைகளின் வாழ்விலும் ஆசீர்வாதம் தடைபடுவதற்கு காரணம் இதுவாக இருக்கலாம். உங்கள் ஒருவரின் காரியம் முழு குடும்பத்தையும் பாதிக்கும் என்பதற்கு ஆகான் ஒரு எச்சரிக்கை. ஆகவே உங்கள் கூடாரத்தின் மையப்பகுதியை சுத்திகரியுங்கள்; வெற்றியாய் வாழுங்கள்.
- Mrs. ஜாஸ்மின் சாமுவேல்
ஜெபக்குறிப்பு:
அலுவலக பணிக்கு “ஜெராக்ஸ் மிஷின்” அவசிய அவசர தேவையாய் உள்ளது. வாங்கப்பட ஜெபியுங்கள்.
இந்த தியானச் செய்தியை பெற்றுக்கொள்ள
Whats app:
தமிழில் பெற - +91 94440 11864
ஆங்கிலத்தில் பெற - +91 86109 84002
ஹிந்தியில் பெற - +91 93858 10496
தெலுங்கில் பெற - +91 94424 93250
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.vmmorg.template.msmapp
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250