இன்றைய தியானம்(Tamil) 07-01-2021
இன்றைய தியானம்(Tamil) 07-01-2021
நல்ல ஆப்பிள்தானே!
“தேவனே, சுத்த இருதயத்தை என்னிலே சிருஷ்டியும்...” – சங்கீதம் 51:10
டேனி தன் அப்பாவுடன் பழங்கள் வாங்கச் சென்றான். அடுக்கடுக்காய் அழகழகாய், வகை வகையாய் பழங்கள் அடுக்கப்பட்டிருந்தன. அப்பா பழங்களை நன்றாக தடவிப் பார்த்து, நல்ல ஆப்பிள்களா என சோதித்து கூடையில் வைத்தார். வீட்டிற்கு வந்த பின் அம்மா நன்றாக ஆப்பிளைக் கழுவி வெட்டினார்கள். ஆனால் உள்ளே பச்சை நிறத்தில் பெரிய புழு ஒன்று அருவருப்பாக நெளிந்தது. புழுவைப் பார்த்த டேனி, அப்பாவிடம், “அப்பா நாம் நல்ல ஆப்பிள்களைத்தானே வாங்கினோம். புழு எப்படி உள்ளே வந்தது?” என்று கேட்டான். அதற்கு அப்பா, “ஆப்பிள் மரத்தில் பூவாய் இருக்கும்போதே பூவிற்குள் சிலவகை பூச்சிகள் முட்டையிட்டு விடும். நாட்கள் கடந்து பூக்கள் காயாகும்போது முட்டைகள் புழுக்களாய் மாறி பழத்திற்குள்ளேயே வாழும்” என்று கூறினார். டேனிக்கு இது மிகவும் ஆச்சரியமாயிருந்தது.
இதைப்போலத்தான், நாம் நம் தாயின் வயிற்றில் உருவாகும்போதே பாவத்திலே கர்ப்பம் தரிக்கப்படுகிறோம். அவைகள் நம் இருதயத்தை ஆண்டு கொள்கிறது. அவைகள்தான் ஜென்ம சுபாவங்கள். உலகில் பிறந்த முதல் குழந்தைகள்தான் காயீன், ஆபேல்! பாவகாரியங்களை கற்றுத்தர உலகில் வேறு எவருமேயில்லை. ஆனாலும் யாரும் கற்றுக் கொடுக்காமலேயே காயீனின் உள்ளத்திற்குள் கோபம், எரிச்சல், பொறாமை இருந்தது, பழிவாங்கும் எண்ணம் இருந்தது. கொலை செய்யுமளவிற்கு காய்மகாரமும் இருந்தது, பார்த்தீர்களா? எங்கிருந்து வந்தது இவைகள். ஆம், வேதம் கூறும் உண்மையின்படியே நாம் பாவ சுபாவத்தோடுதான் பிறக்கிறோம். இதன் வெளிப்பாடுதான் மாம்சத்தின் கிரியைகளாக வெளிவருகிறது.
பிரியமானவர்களே! நமக்குள்ளே இருக்கும் ஜென்ம சுபாவங்களை ஜெயித்து ஆவிக்குரியவர்களாக வாழ்வது தானே கிறிஸ்தவ வாழ்க்கை! இருப்பினும் நம் சுய பெலத்தினால் ஜென்ம சுபாவத்தை ஜெயிக்க முடியுமா? இல்லையே! பரிசுத்த ஆவியானவரின் பெலத்தோடு ஒவ்வொரு நாளையும், ஒவ்வொரு சூழ்நிலையையும், ஒவ்வொரு பிரச்சனையையும் எதிர்கொண்டால் நிச்சயம் முடியும். அப்போஸ்தலனாகிய பவுலைப் போல நம் பழைய மனிதனை சிலுவையில் அறைந்துவிட்டு, இயேசுவோடு உயிர்த்தெழுந்தோமானால் நாம் அல்ல, இயேசுவே நமக்குள் பிழைத்திருப்பார். அவரே நம்மை வெற்றியுள்ள கிறிஸ்தவ வாழ்வு வாழ கிருபை செய்வார். அல்லேலூயா!
- Mrs. ஜாஸ்மின் சாமுவேல்
ஜெபக்குறிப்பு:
நாம் வெளியிட்டுள்ள ஒரு வருட தியான இதழ் “இயேசுவுடன் இன்று” அநேகர் வாங்கி வாசித்து தேவனுக்குள் வளர ஜெபியுங்கள்.
இந்த தியானச் செய்தியை பெற்றுக்கொள்ள
Whats app:
தமிழில் பெற - +91 94440 11864
ஆங்கிலத்தில் பெற - +91 86109 84002
ஹிந்தியில் பெற - +91 93858 10496
தெலுங்கில் பெற - +91 94424 93250
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.vmmorg.template.msmapp
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250