Village Missionary Movement

கிராம மிஷனரி இயக்கம்


இன்றைய தியானம்(Tamil)  01-01-2021

இன்றைய தியானம்(Tamil)  01-01-2021

பாதுகாப்பவர் இயேசு

“...நீர் ஏழைக்குப் பெலனும், நெருக்கப்படுகிற எளியவனுக்குத் திடனும், பெருவெள்ளத்துக்குத் தப்பும் அடைக்கலமும், வெயிலுக்கு ஒதுங்கும் நிழலுமானீர்.” – ஏசாயா 25:4

ஒரு பெரும் அமெரிக்க கோடீஸ்வரர் ஒருவரை மரண பயம் வாட்டியது. திடீரென்று உலக யுத்தம் நேரிட்டு தன் நகரில் அணுகுண்டுகள் பொழிந்தால் என்ன செய்வது என்று நினைத்து கலங்கினார். எனவே அணு வீச்சிலிருந்து தன்னையும் தன் குடும்பத்தையும் காத்துக் கொள்ள பூமிக்கடியில் ஒரு பெரிய அணுகுண்டு மறைவிடம் ஒன்றைக் கட்ட தீர்மானித்தார். பெரிய பெரிய விஞ்ஞானிகள், கட்டிட நிபுணர்கள், இன்ஜினியர்கள் இடைவிடாதபடி உழைத்து பல கோடி செலவில் அணுகுண்டு வீச்சிலிருந்து தப்பக்கூடிய உறுதியான பங்களாவைக் கட்டி முடித்தனர். 

அந்த பங்களாவை பிரதிஷ்டை செய்யும்படி அந்த கோடீஸ்வரன் பிரபல தேவ ஊழியரான மாரீஸ் செருல்லோவை அழைத்திருந்தார். ஒவ்வொரு அறையையும் போதகருக்கு காட்டிக் கொண்டே தான் அவற்றை விஞ்ஞான ரீதியில் அமைத்திருப்பதாகவும், எந்த வெப்பமும், அதிர்ச்சியும் அந்த பங்களாவின் சுவர் அசைக்க முடியாது என்றும் அந்த சுவர் பெலனுள்ள உலோகக் கலவையில் அமைத்திருப்பதாகவும் அதன் அருமை பெருமைகளை எல்லாம் புகழ்ந்து பேசிக் கொண்டே போனார். 

போதகர் இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்துவிட்டு, தான் இதைவிட குறைந்த செலவில், அதிக உறுதியோடு வேறு ஒரு மறைவிடம் அமைத்திருப்பதாகவும், அதில் முழு பாதுகாப்பு உண்டு என்றும், அதை சிறகுகளாலே தான் கட்டியதாக சொன்னபோது புருவத்தை உயர்த்தினார் கோடீஸ்வரர். அமைதியோடு போதகர் சங். 91:4 ஐ திறந்து காட்டினார். எப்படி தான் உன்னதமானவருடைய நிழலில் அடைக்கலம் புகுந்தார் என்றும், அவரது செட்டைகளின் மறைவில்தான் நிழல் என்றும் போதகர் விளக்கிய போது வாயடைத்துப் போனார் கோடீஸ்வரர். வேத புஸ்தகத்திலே யோபு என்ற பக்தனை பற்றி வாசிக்கும் பொழுது, அவருடைய வழிகள் கர்த்தருக்கு பிரியமாய் இருந்தபடியினாலும், தன்னையும், தன் குடும்பத்தையும் அவர்தான் பாதுகாக்கிறவர் என்று அவரை சார்ந்து கொண்டபடியால், கர்த்தர் யோபுவையும் அவனுக்கு உண்டான யாவற்றையும் வேலியடைத்து பாதுகாத்தார் என்று எழுதப்பட்டிருக்கிறது. 

அன்பானவர்களே! முந்திய வருடம் வந்த பல விதமான ஆபத்துகளிலும், வியாதிகளிலும் சோர்ந்துபோய் பணமெல்லாம் செலவழித்தும் என் குடும்பத்திற்கு ஒரு பாதுகாப்பும் இல்லையே என்று கலங்கிக் கொண்டு இருக்கிறீர்களா? உங்களைப் பார்த்து இயேசு சொல்லுகிறார், இந்தப் புதிய ஆண்டில் உங்களையும், உங்கள் குடும்பத்தையும் எல்லாவித தீமையிலிருந்தும், கொள்ளை நோயிலிருந்தும் நான் வேலியடைத்து பாதுகாப்பேன் என்று! அவருடைய கரத்தில் உங்களை ஒப்புக்கொடுங்கள். நிச்சயம் இவ்வாண்டு முழுவதும் தேவனுடைய பாதுகாக்கும் கரம் உங்கள் குடும்பத்தின் மீது அமரும். எதற்கும் அஞ்சி கலங்கவேண்டாம். 
-    S.P. சந்தனபாண்டி

ஜெபக்குறிப்பு:
இந்த புதிய வருடத்தில் தேவனுடைய கரம் ஊழியத்தின் ஒவ்வொரு பகுதியிலும் வல்லமையாய் வெளிப்படும்படியாக ஜெபியுங்கள்.  

இந்த தியானச் செய்தியை பெற்றுக்கொள்ள
Whats app: 
தமிழில் பெற -  +91 94440 11864
ஆங்கிலத்தில் பெற - +91 86109 84002
ஹிந்தியில் பெற - +91 93858 10496
தெலுங்கில் பெற - +91 94424 93250

Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.vmmorg.template.msmapp

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250


Comment As:

Comment (0)