Village Missionary Movement

கிராம மிஷனரி இயக்கம்


இன்றைய தியானம்(Tamil) 13.05.2025

இன்றைய தியானம்(Tamil) 13.05.2025

 

தேவசித்தத்திற்கு ஒப்புக்கொடு

 

"...அதைச் சொன்னேன், அதை நிறைவேற்றுவேன், அதைத் திட்டம் பண்ணினேன், அதைச் செய்து முடிப்பேன்" - ஏசாயா 46:11

 

என்னுடைய மூத்த மகனின் வாழ்வில் தேவன் செய்த அற்புதத்தைக் குறித்து உங்களோடு பகிர்ந்து கொள்ளுகிறேன். கல்லூரியில் இளநிலைப் படிப்பை முடித்து விட்டு, அதே கல்லூரியில் முதுநிலைப் படிப்பைத் தொடர வேண்டும் என்று எண்ணியிருந்தான். Entrance exam எழுத வேண்டிய நாளில் சில இடையூறுகளினிமித்தம் சரியான நேரத்திற்கு தேர்வு எழுதும் அறைக்கு செல்ல இயலவில்லை. மிகவும் சோர்ந்து போய் காணப்பட்ட அவனிடம் exam எழுதிவிட்டு வெளியில் வந்த அவனுடைய நண்பன், "இயேசப்பா, இதை விட பெருசா எதையோ உனக்கு செய்யப் போகிறார்" என்று கூறியுள்ளான். இவனும் அமைதியாக வந்து விட்டு என்னிடம் இந்தக் காரியத்தைப் பகிர்ந்து கொண்டான். பின் வரும் நாட்களில் அவன் எதிர்பார்த்ததை விட சிறப்பான மேற்படிப்பை தொடரச் செய்து அவனுடைய வாழ்வில் தேவன் வைத்திருந்த அவருடைய திட்டத்தை நிறைவேற்றி ஆசீர்வதித்துள்ளார்.

 

அநேக நேரங்களில் நாம் திட்டமிட்டபடி, நமது விருப்பப்படி அனைத்து காரியங்களும் நடக்க வேண்டும் என எண்ணுகிறோம். பெரும்பாலும் அவை நன்மையான, நேர்மையான, சரியான காரியங்களாக இருந்தாலும் நமது விருப்பப்படி அது நடக்காத போது நாம் மிகவும் சோர்ந்து போய் விடுகிறோம். ஆனால் அந்த காரியம் தேவ திட்டப்படி நடக்கும் போது நம் வாழ்வு மிகச் சிறப்பாய் அமையும். 

  

ஆதி 39, 40 ம் அதிகாரங்களில் நாம் யோசேப்பின் வாழ்வைக் குறித்து தியானிக்கிறோம். தகப்பனின் அருகில் செல்லப்பிள்ளையாய் வாழ்ந்த யோசேப்பின் வாழ்வில் தேவனுடைய திட்டம் இருந்ததினால் எதிர்பாராத சில கடினமான சூழ்நிலையைக் கடந்து செல்ல வேண்டியிருந்தது. 11 ஆண்டுகள் காரணமின்றி சிறைப்பட்டிருந்த போது அங்கு இருந்த பானபாத்திரக்காரனின் கனவிற்கு யோசேப்பு பொருள் கூறுகிறான். அவன் விடுதலையடைந்து மீண்டும் பணிக்கு திரும்பும்போது தன்னைப் பற்றி பார்வோனிடம் கூறி விடுவிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறான். ஆனால் பானபாத்திரக்காரன் இரண்டு ஆண்டுகாலமாக இதை மறந்து விடுகிறான். ஒருவேளை பார்வோனிடம் கூறியிருந்தால் யோசேப்பை அழைத்து விசாரித்து மீண்டுமாக அவனை இஸ்ரவேல் தேசத்திற்கு அனுப்பி வைத்திருக்கலாம். ஆனால் தேவதிட்டம் அதுவல்ல. தேவன் யோசேப்பை எகிப்து தேசம் முழுமைக்கும் அதிகாரியாக்க விரும்பினார். நாம் விரும்புவதை விட நம் தேவன் நம்மை இன்னும் மேலான நிலையில் வைத்திருக்கவே விரும்புகிறார். ஏனெனில் அவருடைய அன்பு மேலான அன்பு. 

 

பிரியமான தேவனுடைய பிள்ளைகளே! தேவனுக்கு நம் வாழ்வைக் குறித்ததான தெளிவான திட்டம் உண்டு. ஆகவே முன்னுக்குப்பின் முரணாக நடக்கும் சில காரியங்கள், சூழ்நிலைகளைக் கண்டு நாம் சோர்ந்து போக வேண்டாம். அவருடைய சித்தத்துக்கு நம் வாழ்வை ஒப்புக்கொடுத்து வாழும்போது, தேவன் தன் திட்டத்தை நம்மில் செயல்படுத்த முடியும்.   

- Mrs. ஜெபக்கனி சேகர்

 

ஜெபக்குறிப்பு:-

VBS ஊழியத்தின் மூலம் அநேக சிறுவர்கள் இரட்சிக்கப்பட ஜெபியுங்கள் .

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864


Comment As:

Comment (0)