இன்றைய தியானம்(Tamil) 12.05.2025
இன்றைய தியானம்(Tamil) 12.05.2025
நற்செய்தியை சொல்வோமா?
"...அவரைக் குறித்துக் கேள்விப்படாதவர்கள் எப்படி விசுவாசிப்பார்கள்?..." - ரோமர்10:14
ஒரு வார காலமாக, சக ஆசிரியர்களுடன் மாணவச் சேர்க்கைக்காக வீதி வீதியாக, வீடு வீடாக அலைந்து பணியாற்றிக் கொண்டிருந்தாள் லிடியா. மிகவும் பிடித்த, ஆசிரியப் பணி ஆனால் தகுதிச் சான்று ஏதுமில்லாமல், பள்ளிப் படிப்பு முடித்து, தனியார் பள்ளியில் பணியாற்றிக் கொண்டிருந்தாள். அன்றும் அப்படித்தான் நண்பகல் 1.00 மணியளவில் திடீரென்று அம்மா, அவளைத் தேடி வந்து, "லிடியா, டீச்சர் டிரெய்னிங்கிற்கு ஆள் எடுக்கிறாங்க வா, விண்ணப்பம் வாங்கிடலாம்" என்றார்கள். அவளுக்கு கோபமும், ஒரு புறம் அனுதாபமும் ஏற்பட்டது. ஏம்மா, நம்ம குடும்பம் இருக்கிற நிலைமையிலே இது தேவையா? என்று கூறினாலும், உடனே அம்மா சொன்னாங்க, "அதெல்லாம் விடு, உன் எதிர்காலம் பற்றி யோசி, உடனே கிளம்பு" என்றார்கள். இது நடந்து இருபது ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இப்போது லிடியா, அரசு பள்ளி ஆசிரியை. கண்களில் நீர் துளிர்க்க, தன் தாயை நினைவுகூர்ந்தாள். ஆண்டவருக்கு நன்றி கூறினாள். அன்று அம்மா வந்து, விண்ணப்பம் கொடுக்கிறாங்கன்னு சொல்லலைன்னா, நான் கேள்விப்படலைன்னா, என் வாழ்வு எப்படி இருந்திருக்கும்? மனதில் ஆயிரம் கேள்விகள்.
சீரிய இராணுவத்தால் முற்றிகை போடப்பட்ட சமாரியா என்னும் தேசத்திலே ஓயாத பஞ்சம். பெற்ற பிள்ளையை கொன்று தின்னும் அளவுக்கு கொடூர பஞ்சம் (2 இராஜாக்கள் 6:28). பட்டணத்தில் இருந்தவர்களுக்கே இந்த நிலையென்றால் குஷ்டரோகம் என்று பட்டணத்திற்கு வெளியில் துரத்தப்பட்டவர்களின் நிலையை யோசித்து பாருங்களேன். அங்கிருந்த 4 குஷ்டரோகிகளும் பசியில் நாம் சாவதற்கு பதில் எதிரிகள் தங்கியிருந்த கூடாரத்திற்கு போவோம் என்று கூறி சீரியர் பாளையத்திற்குச் சென்றனர். ஆண்டவர் சீரியரின் இராணுவத்திற்கு இரதங்களின் இரைச்சலையும், குதிரைகளின் இரைச்சலையும், மகா இராணுவத்தின் சத்தத்தை எதிரிகளுக்கு கேட்க செய்தார். எதிரிகள் பயந்து எல்லாவற்றையும் விட்டு ஓடிப்போனார்கள். அந்த குஷ்டரோகிகள் இந்த நற்செய்தியை தன்னுடைய தேசத்தில் வந்து அறிவித்தனர். தேசத்தின் பஞ்சம் மாறி மகிழ்ச்சி திரும்பியது. குஷ்டரோகிகள் சமாரிய தேசத்திற்கு அறிவித்த நற்செய்தி தேசத்தின் பஞ்சத்தை மாற்றியது.
அதை போலவே அன்புக்குரியவர்களே! லிடியாவுக்கு அவங்க அம்மா சொன்னது ஓர் நற்செய்தி. இயேசு கிறிஸ்துவை அறிந்த ஒவ்வொருவரும் பிறருக்குச் சொல்ல வேண்டிய நற்செய்தி ஒன்றுண்டு. ஆம், "இயேசு கிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி நம்மைச் சுத்திகரிக்கும்." அவரே, அவர் மட்டுமே, அவர் சிலுவையில் சிந்திய இரத்தம் மட்டுமே, நம்மை பாவச் சேற்றிலிருந்து தூய்மைப்படுத்தி புதிய மனுஷனாக்கும். அல்லேலூயா! இந்த நற்செய்தி உங்களுக்குத்தான் நம்புவீர்களா? கீழ்ப்படிந்து, அவரிடம் வந்து சேருங்கள், புது வாழ்வு பெறுங்கள். ஆமென்.
- Mrs. எமீமா சௌந்தரராஜன்
ஜெபக்குறிப்பு:-
6000 கிராமங்களில் VBS ஊழியம் செய்ய ஏற்ற கால சூழ்நிலையைத் தேவன் கட்டளையிட ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864