இன்றைய தியானம்(Tamil) 26-01.2023
இன்றைய தியானம்(Tamil) 26-01.2023
என் இந்தியா
“…யாவருக்கும் செலுத்த வேண்டிய கடமைகளைச் செலுத்துங்கள்; எவனுக்கு வரியைச் செலுத்த வேண்டியதோ அவனுக்கு வரியையும்...செலுத்துங்கள்...” - ரோமர் 13:7
இந்தியாவின் குடிமக்களாகிய நம் அனைவருக்கும் வேதம் சில காரியங்களை அடிப்படைக் கடமை என்று போதிக்கிறது. இதை சரியாய் செய்யும்போது நம் தேசம் ஆசீர்வதிக்கப்படும். நாமும் ஆசீர்வதிக்கப்படுவோம். அக்கடமைகள் என்னவென்று காண்போமா?
1. வரிகளைக் கட்டுவது :- (மத்தேயு 17:24-27)
நம் தேசத்தின் பிரச்சனைகளில் பெரிய பிரச்சனை கருப்புப்பணம். இதை ஒழிக்க அதிரடி வழிகளை மத்திய அரசு எடுத்தாலும், வரி கட்டாமல் பொய் கணக்குக் காட்டி சேர்க்கிற இந்த கருப்புப் பணத்தால் நம் நாடு முன்னேற முடியாமல் குந்தி குந்தி செல்கிறது. கிறிஸ்தவர்களாகிய நாம் வரிகளை சரியாய் கட்டும்போது தேசம் ஆசீர்வதிக்கப்படும். இயேசுகிறிஸ்து, தனக்கும் தன் சீஷர்களுக்கும் வரி கட்டினார் என்பதையும் நாம் அறிந்திருக்கிறோமல்லவா?
2. அதிகாரத்திலுள்ளவர்களை கனம் பண்ணுவது :- (1 பேதுரு 2 :17)
அரசாங்க அதிகாரிகள் அனைவரும் தேவனாலே உண்டாயிருக்கிறார்கள் என்றும் அவர்களை கனம்பண்ண வேண்டுமென்றும் வேதம் நமக்கு போதிக்கிறது. “நான் தேவனுடைய பிள்ளை, தேவனைத் தவிர எந்த மனிதனையும் கனம் பண்ணமாட்டேன்” என்று சொல்வது மதியீனம். ஒரு அதிகாரி நற்குணம் இல்லாதவராய் லஞ்சம் வாங்குபவராய் இருந்தாலும் கூட அவரையும் நாம் கனம் பண்ண வேண்டும். வெளிப்படையான பாவனையில் அல்ல, இருதயத்திலிருந்து அதைச் செய்ய வேண்டும். அதே நேரத்தில் நாம் சுவிசேஷத்தை அறிவிப்பதற்கு தடையாக அதிகாரிகளோ, சட்டங்களோ வரும் போது அவைகளுக்கு கீழ்ப்படிய தேவையில்லை. மதமாற்ற தடைச்சட்டங்கள் நம்மை தடை செய்யக் கூடாது. ஒருமுறை சுவிசேஷத்தை அறிவிக்கக் கூடாதென்று அப்போஸ்தலனாகிய பேதுருவை பிரதான அதிகாரி ஒருவர் மிரட்டினார். அப்போது பேதுரு, “மனுஷருக்குக் கீழ்ப்படிகிறதைப் பார்க்கிலும் தேவனுக்கு கீழ்ப்படிகிறது அவசியமாயிருக்கிறது” (அப்.5:29) என்று கூறினார்.
3. தேசத்திற்காக ஜெபிப்பது :- (1தீமோ.2:1,2)
எல்லாருக்காகவும் தேவனைத் துதித்து, ஜெபிக்க வேண்டியது நமது கடமை. நாம் இரயிலில் பயணிக்கும்போது, அத்துறை அதிகாரிகளுக்காகவும், அதின் ஊழியர்களுக்காகவும் தேவனைத் துதிப்போம். நம் தேச எல்லையில் நின்று நம்மை பாதுகாக்கும் இராணுவ வீரர்களுக்காக ஜெபிப்போம். ஒரு வசதியான கட்டிடத்திற்கு அஸ்திபாரம் எவ்வளவு அவசியமோ, அப்படியே கிறிஸ்தவர்களாகிய நாமும் நம் ஜெபமும் நம் இந்திய தேசத்திற்கு அவசியம்! தேவனுக்குக் கீழ்ப்படிகிறவர்கள் எவர்களோ, அவர்கள் அரசாங்கத்திற்கும் கீழ்ப்படிந்து சிறந்த குடிமக்களாய் வாழ்வார்கள்.
இனிய குடியரசு தின நல்வாழ்த்துக்கள்.
- J. சந்தோஷ்
ஜெபக்குறிப்பு:
பிலிப் காஸ்பல் டீம் மூலம் சந்திக்கப்படும் புதிய கிராமங்களுக்காக ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864