இன்றைய தியானம்(Tamil) 11-01.2023
இன்றைய தியானம்(Tamil) 11-01.2023
கல்லூரி, விடுதி ஊழியம்
“அதுபோல, மனந்திரும்ப அவசியமில்லாத தொண்ணூற்றொன்பது நீதிமான்களைக்குறித்துச் சந்தோஷம் உண்டாகிறதைப்பார்க்கிலும் மனந்திரும்புகிற ஒரே பாவியினிமித்தம் பரலோகத்தில் மிகுந்த சந்தோஷம் உண்டாயிருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.” - லூக்கா 15:7
நான் ஒரு மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தேன். இயேசுகிறிஸ்துவை அறியாத குடும்பத்திலிருந்து வந்த எனக்கு, நாம் வணங்கும் தெய்வங்களைப் போல “இயேசுவும் ஒரு தெய்வம்” என்று எண்ணிக் கொண்டிருந்தேன். ஆனால் ‘’இயேசு மட்டுமே தெய்வம்’’ என்று நான் அறிந்து கொள்ளும்படி அதே கல்லூரியில் 3ம் ஆண்டு படிக்கும் இரண்டு சகோதரிகள் மிகவும் பிரயாசப்பட்டனர். எங்கள் கல்லூரி விடுதியில் வழக்கமாக மாலை 6-7 PM அந்த இரண்டு சகோதரிகள் மற்றும் ஒரு சிலராய் சேர்ந்து ஜெபிப்பது வழக்கம். ஒரு முறை நான் மிகவும் மனஅழுத்தத்தில், தூக்கமில்லாமல், இனியும் எனக்கொரு எதிர்காலம் உண்டா என்ற கேள்வியோடு தலையணையை என் கண்ணீரால் நனைத்துக்கொண்டிருக்கும் சமயத்தில், அவர்களது உற்சாகமன பாடல், ஆராதனை, ஜெபம் என்னை அவர்கள் பக்கமாய் இழுத்தது. நானும் இயேசுகிறிஸ்துவை என் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டு ஒரு சில மாதங்களில் சபைக்குத் தவறாமல் செல்ல ஆரம்பித்து விட்டேன். இந்த 8 வருட காலங்களில் பல நெருக்கங்கள் போராட்டங்கள் இருப்பினும் எல்லாவற்றிலும் என் தேவன் என்னை வழிநடத்துவதையும், உயர்த்துவதையும் கண்களால் பார்க்கிறேன். இதற்குக் காரணம், என்னை தூண்டில் போட்டு மீன் பிடிப்பது போல, அந்த சகோதரிகள் என்னிடத்தில் வந்து, என் தனிப்பட்ட குறைகளுக்காக ஜெபித்தும், எனக்கான ஆலோசனைகளைத் தந்தும் என்னை கர்த்தருக்குள் வழிநடத்தினார்கள்..
இயேசுகிறிஸ்துவும் கூட வலை போட்டு மீன்பிடிக்கக் கூடிய பெரிய திறமை வாய்ந்த மீனவராயிருந்த பேதுருவை அழைத்து தூண்டில் போட்டு ஒரு மீனைப் பிடிக்கச் சொல்கிறார். ஒரே ஒரு மீனைப் பிடிக்கத் தூண்டிலோடு எவ்வளவு மணி நேரங்கள் பேதுரு காத்திருந்தார் என்று தெரியவில்லை. ஆனாலும், அந்த ஒரு மீனின் வாயில் தான் வெள்ளிப்பணம் உள்ளதாகவும், அந்தப் பணத்தை எனக்காகவும், உனக்காகவும், கொடு என்கிறார்.
எனக்கன்பானவர்களே! ஒரு மீன்தானே என்று அற்பமாய் நினைத்துவிட்டு தூண்டில் போடாமல் விட்டுவிடாதீர்கள். அந்த ஒரு மீன் அவருக்குத் தேவை. வழிநடத்தின அந்த சகோதரிகள் என்னை அற்பமாய் நினைத்திருந்தால், இன்று நான் மருத்துவராகவும், தேவனுடைய ஊழியத்தை செய்பவளாகவும் இருந்திருக்கமாட்டேன். அவர்கள் தூண்டில் போட்டு காத்திருந்தார்கள், தேவன் மீனை அகப்படச்செய்தார். இதை வாசித்துக் கொண்டிருக்கிற நீங்களும் பல ஆத்துமாக்களைத் தேடி அல்ல, அழிந்து போகக்கூடிய, உங்கள் அருகாமையில் உள்ள ஒரு ஆத்துமாவின் மேல் கரிசனையுள்ளவர்களாக அவர்களை நோக்கி தூண்டிலைப் போட கற்றுக்கொள்ளுங்கள். அந்த ஒரே ஒரு ஆத்துமாவின்(மீனின்) மூலமாக மொத்த பரலோக ராஜ்யமும் சந்தோஷப்படும்.
நினைவிற்கு: அநேக ஆத்துமாக்களைச் சம்பாதித்த நீங்கள், அவர்கள் தொடர்ந்து தேவராஜ்ஜியம் கட்டப்பட செயல் படுகிறார்களா என்று கண்காணிப்பது உங்கள் பொறுப்பு என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
- Sis. Nowsmie
ஜெபக்குறிப்பு:
நம் வளாகத்தில் டியூசன் படிக்க வரும் மாணவர்கள் இயேசுவின் அன்பை ருசிக்க ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864