இன்றைய தியானம்(Tamil) 24-11-2022
இன்றைய தியானம்(Tamil) 24-11-2022
நற்குணம்
“ஆவியின் கனி, சகல நற்குணத்திலும், நீதியிலும் உண்மையிலும் விளங்கும்.’’ – எபேசியர் 5:9
தீங்காகத் தோன்றுகிறவற்றை விட்டு விலகுவது மட்டுமின்றி, நம்மால் இயன்ற அளவு மற்றவர்களின் ஆத்தும தேவைகளுக்கேற்ப உதவி செய்வது நற்குணம் ஆகும். நம்முடைய நன்னடத்தைகளிலும், நம் எல்லாச் செயல்களிலும் “நற்குணம்” வெளிப்பட வேண்டும்.
இன்று பொதுவாக எல்லா மதத்தவரிடமும் இந்த நற்குணம் என்ற சுபாவம் காணப்படுகிறது. ஒரு முறை நான் வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, எனக்கு முன்சென்ற புறமதத்தவரின் வாகனத்தில் “தீமைக்கு நன்மை செய்’’ என்ற வாசகம் ஒட்டப்பட்டிருந்தது. அவர்கள் அநேக நற்கிரியைகளை செய்து தங்கள் ஆத்துமாவில் திருப்தியையும் மகிழ்ச்சியையும் பெற்றுக் கொள்கின்றனர். ஆனால் இயேசுகிறிஸ்துவை அறிந்து, அனுபவித்து அவரோடு வாழ்ந்து கொண்டிருக்கிற நமது குணமே நற்குணமாக மாறி நம்மைச் சுற்றியுள்ள மக்களுக்கு இயல்பாகவே நற்கிரியைகளைச் செய்ய நாம் தூண்டப்பட வேண்டும்.
தொற்காள் நற்கிரியைகளையும், தருமங்களையும் மிகுதியாக செய்துகொண்டே வந்தாள் (அப் 9:36). ரூத்தும் நற்குணங்கள் நிறைந்தவளாக உத்தமமாய் நடந்தபடியால் குணசாலி என ஊரார் அனைவராலும் அறியப்பட்டிருந்தாள் (ரூத்.3:11,12). இன்றைய வேதப்பகுதியில் இயேசுகிறிஸ்து குறிப்பிடும் உயர்ந்த குணநலன்கள் அனைத்தும் நம்மை பாக்கியவான்களாக அல்லது நற்குணம் நிறைந்தவர்களாக வாழ வழிவகுக்கும். வேதத்தில் “ஆவியின் கனிகள்’’ என்றல்ல, “ஆவியின் கனி’’என்றே (கலா.5:22-23) ஒருமையில் கூறப்பட்டுள்ளது. ஒரு கனியில் வாசனை, சுவை, திடம், ஈரப்பதம், மென்மை, நிறம், உருவம், ஊட்டச்சத்து, தாதுபொருட்கள் இவை அனைத்தும் அடங்கியிருப்பதைப்போல், ஆவிக்குரிய கனிகள் ஒன்பது பண்புகளும் நம் வாழ்வில் காணப்படவேண்டுமென தேவன் விரும்புகிறார்.
இத்தாலி நாட்டில் பிறந்த பிளாரன்ஸ் அம்மையார் தம் இளம் வயதிலே கிறிஸ்துவின் இரக்கமும் நற்குணம் நிறைந்தவராய், நோயால் வாழும் ஏழை, எளிய மக்களைக் கண்டு உள்ளம் உடைந்தார். தன் 16-ம் வயதில் செவிலியர் பயிற்சி பள்ளியில் சேர்ந்து பயிற்சி பெற்றார். 1854-ல் ஐரோப்பாவில் நடந்த போரில் காயமுற்ற போர்வீரர்களை கருணையுடன் காப்பாற்றினார். இவரது சேவையைப் பாராட்டி விக்டோரியா மகாராணி கொடுத்த மிகப்பெரும் பரிசுத்தொகையை, ஏழை மக்களுக்கெனவே செலவழித்து செவிலியர் பயிற்சிப்பள்ளி தொடங்கி அநேகரை வாழச் செய்தார். இவரது நற்குணமும், அன்பும் அநேகரைத் தொட்டது.
தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியைகளையும் செய்யத்தகுதியுள்ளவனாக இருக்கும்படியே தேவன் விரும்புகிறார். எனக்கன்பானவர்களே நம்மிடமுள்ள நற்குணத்தைக் கண்டு மற்ற மக்கள் தேவனை மகிமைப்படுத்த வேண்டும். ஆமென்.
- Mrs. சரோஜா மோகன்தாஸ்
ஜெபக்குறிப்பு:
பிலிப் காஸ்பெல் டீம் மூலம் வாரந்தோறும் சந்திக்கப்பட்டு வரும் புதிய கிராமங்களில் உள்ள மக்கள் இயேசுவை ஏற்றுக் கொள்ள ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250